புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி.!

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி.!

Update: 2021-01-05 10:56 GMT

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக புதிய நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்பட இருந்தது. அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. மத்திய தலைமைச் செயலகத்தை 2024ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி அனுமதி அளித்தது.

இதனையடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்ட வழக்கில், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு இந்த தீர்ப்பு சரியான பதிலடியாக அமைந்துள்ளது என பாஜக கூறியுள்ளது.
 

Similar News