45 நிமிடத்தில் சென்னை டூ மதுரை பயணிக்கலாம்.. ஹைப்பர் லூப் பற்றி பார்ப்போம்.!

45 நிமிடத்தில் சென்னை டூ மதுரை பயணிக்கலாம்.. ஹைப்பர் லூப் பற்றி பார்ப்போம்.!

Update: 2020-11-15 09:36 GMT

மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்து மற்றும் ரயிலில் 8 மணி நேரத்தில், விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லும் நாம் வெறும் 45 நிமிடங்களில் செல்வதற்கு ‘ஹைப்பர் லூப்’ வாகனம் சாத்தியம் ஆகிறது. இது மட்டும் இந்தியாவில் வந்து விட்டால் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் போன்ற நகரங்களுக்கு ஒரு சில மணி நேரங்களிலேயே நாம் சென்று விடலாம். 

ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து கடந்த 2013ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அதில் நீண்ட மேம்பாலம் அமைத்து அதற்கு மேல் காற்று நுழையாதபடி பெரிய குழாய் பதிக்கப்படுகிறது. அந்த குழாய்க்குள் இருக்கைகளுடன் கூடிய ‘டியூப்’ மாத்திரை வடிவ உருளை பொருத்தப்படும். இயங்க துவங்கியதும் காந்த விசையால் குழாய்க்குள் அந்த உருளை அந்தரத்தில் மிதந்தபடி மணிக்கு 1000 கி.மீ., வேகத்தில் பறக்கும்.

பல்வேறு நாடுகளில் ‘ஹைப்பர் லூப்’ பற்றிய பரிசோதனைகள் நடந்து வருகிறது. நம் நாட்டில் மும்பை - புனே ‘ஹைப்பர் லூப்’ திட்ட ஆரம்ப பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கி மாதிரி (புரோட்டோடைப்) ஹைப்பர் லூப் தயாரிக்கப்படது. மும்பை - புனே 200 கி.மீ., தொலைவு ஆகும். இதற்கு நாம் காரிலோ அல்லது ரயிலிலோ பயணிக்க 4 மணி நேரம் ஆகும். 

ஹைப்பர் லூப் மட்டும் வந்தால் பயண நேரம் 20 நிமிடமாக குறையும். இதற்கான ஒப்பந்தம் மகாராஷ்டிரா அரசு, ‘விர்ஜின் ஹைப்பர் லூப் ஒன்’ நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் இடையே கையெழுத்தானது. அதே போன்று தமிழகத்திற்கு வந்தால் மதுரை டூ சென்னைக்கு வெறும் 45 நிமிடத்தில் செல்லலாம்.

அமெரிக்காவின் என்.இ.டி.டி., (நான் டிரடிஷனல் அண்ட் எமர்ஜிங் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி கவுன்சில்) அனுமதி கொடுத்த பின் தான் வர்த்தக ரீதியாக ஹைப்பர் லூப் கொண்டு வர முடியும். எலன் மாஸ்க் ‘ஏர் குஷன்’ தொழில்நுட்பத்தில் ஹைப்பர் லூப் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இன்று காந்த விசையால் தயாரிக்கப்படுகிறது.

மூடிய குழாயில் செல்லும் இந்த வாகனம் ‘ஹைப்பர் லூப்’ என்றால் திறந்த வெளியில் செல்லும் ரயில் ‘ஒப்பன் லூப்‘ என்று சொல்லலாம். இது குறித்து 1940 முதல் ஆய்வு நடந்து வருகிறது. தற்போது தான் இதற்கான முழு வடிவம் கிடைத்துள்ளது.

மும்பை, புனேவுக்காக மாதிரி ஹைப்பர் லூப் அமெரிக்காவில் சோதனை கட்டத்தில் உள்ளது. நிலம், பாதுகாப்பு, மின்சாரம் போன்ற பல வசதிகள் கிடைத்தால் தான் இது நம் நாட்டில் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. 

எது எப்படியோ இந்த ஹைப்பர் லூப் மட்டும் இந்தியாவில் வந்தால் ஏழை மக்களுக்கு வரபிரசாதமாக அமையும். மிக நீண்ட தூரம் செல்ல வேண்டுமானால் ரயிலில் நாள் கணக்கில் செல்ல வேண்டும். ஆனால் குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் ஹைப்பர் லூப்பில் ஏழைகளும் எளிதாக தங்களது ஊர்களுக்கு எளிதில் சென்று வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
 

Similar News