உலக அளவிலும் நாம் தான் டாப்! இந்தியாவில் பொது போக்குவரத்தில் ரோப்-கார் திட்டத்தை செயல்படுத்தப்போகும் முதல் நகரமானது வாரணாசி!

Varanasi To Become First Indian City to Start Ropeway Service in Public Transportation

Update: 2021-11-22 05:06 GMT

பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி, பொதுப் போக்குவரத்தில் "ரோப்-வே:" சேவையைப் பயன்படுத்தும் முதல் இந்திய நகரமாக விரைவில் மாற உள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, உலகின் மூன்றாவது மற்றும் இந்தியாவின் முதல் பொதுப் போக்குவரத்து ரோப்-வே, கான்ட் ரயில் நிலையத்திலிருந்து (வாரணாசி சந்திப்பு), சர்ச் சதுக்கம் (கோடவுலியா) வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரைவில், 424 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ரோப்வே திட்டம் தொடங்கப்படுவதால், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தசாஷ்வமேத் காட் ஆகிய பகுதிகளை எளிதில் அணுக முடியும்.

4.2 கிமீ தூரத்தை உள்ளடக்கும் இத்திட்டம்,  உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான, கிழக்கு இந்தியாவின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படும் வாரணாசியில்,  போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் இது குறித்து இஷா துஹான் கூறுகையில், "பொலிவியா மற்றும் மெக்சிகோ சிட்டிக்கு அடுத்தபடியாக, இத்திட்டத்தை செயல்படுத்தும் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கும். அதே போல நாட்டில் பொதுப் போக்குவரத்திற்கு ரோப்வேயை பயன்படுத்தும் முதல் நகரமாக வாரணாசி இருக்கும்" என்றார். இந்த முன்னோடி திட்டம் ஜப்பானில் உள்ள கியோட்டோவை போன்று அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரதான டெர்மினஸ் கான்ட் ரயில் நிலையத்தில் இருக்கும். மற்ற நிலையங்கள் சஜன் திராஹா, ரத்யாத்ரா மற்றும் கிர்ஜாகர் (கோடோவ்லியா) கிராசிங்குகளில் இருக்கும். இதன் மூலம் 4.2 கிமீ தூரத்தை வெறும் 15 நிமிடங்களில் பயணிக்க முடியும். சுமார் 220 ரோப்-கார் பெட்டிகள், சுமார் 45 மீட்டர் உயரத்தில் இயங்கும். ஒவ்வொரு கேபிள் காரிலும் 10 இருக்கைகள் இருக்கும். கார்கள் 90 வினாடிகள் முதல் 120 வினாடிகள் இடைவெளியில் நகரும். ஒரே நேரத்தில் 4,000 பேர் ஒரே திசையில் பயணிக்க முடியும்.

இரவிலும் ரோப்வே இயக்கப்படும். இத்திட்டத்திற்கான செலவு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே 80:20 என்ற விகிதத்தில் பிரிக்கப்படும். ரோப்வேக்காக கட்டப்பட்ட அனைத்து நிலையங்களும் காசியின் கலை, மதம் மற்றும் கலாச்சாரத்தின் கண்ணோட்டத்தை காண்பிக்கும் என்று வாரணாசி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News