விடுமுறையை கழிக்க கோவாவுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்.!
விடுமுறையை கழிக்க கோவாவுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்.!
மும்பை, வாஷி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு டெம்போ வேனில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவாவுக்கு புறப்பட்டு சென்றனர். டெம்போவை ரிங்கு குப்தா 30, என்பவர் ஓட்டியதாக தெரிகிறது. இதில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் டெம்போ சத்தாரா மாவட்டம், காரட் பகுதியில் உள்ள உம்ராஜ் கிராம ஆற்று பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீரென டெம்போ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து 50 அடி பள்ளத்தில் விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் டெம்போவில் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மதுசுதன் நாயர் 42, அவரது மனைவி உஷா 40, தம்பதியின் மகன் ஆதித்யா 23, மற்றும் சஞ்சயா 35, அவரது 3 வயது மகன் ஆரவ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
மேலும் படுகாயமடைந்த ஓட்டுநர் உட்பட 7 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நடந்ததாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். எனவே போலீசார் விபத்து குறித்து டெம்போ வேன் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.