'அரசியலமைப்பு தினம்' ஏன் இன்று அனுசரிக்கப்படுகிறது?

'அரசியலமைப்பு தினம்' ஏன் இன்று அனுசரிக்கப்படுகிறது?

Update: 2020-11-26 13:56 GMT

2015ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினம் அல்லது சம்விதன் திவாஸ், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. தேசிய சட்ட தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள், நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு சபையால் இந்திய அரசியலமைப்பு முதல் முறையாக ஏற்றுக்கொண்டதை நினைவு கூர்கிறது. இந்த அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதுவே நம் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

 நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, குடி மக்களிடையே அரசியலமைப்பு மதிப்புகளை வளர்ப்பதற்காக என்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று 2015ல் அறிவித்தது. 

2015ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கரின் 125 ஆவது ஆண்டு நிறைவை  ஆண்டு குறித்தது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நவம்பர் 26ஐ அரசியலமைப்பு தினமாக அறிவித்தது.  அதற்கு முன்னர், நாட்டின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது சட்ட தினமாக மட்டுமே அனுசரிக்கப்பட்டு வந்தது.

 அரசியலமைப்பு சபை:

அரசியலமைப்புச் சபையின் முதல் அமர்வு அதாவது இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட குழு, டிசம்பர் 9, 1946 அன்று இப்பொழுது பாராளுமன்றத்தின் மத்திய மண்டபம் (அப்போதைய அரசியல் அமைப்பு மண்டபத்தில்) நடைபெற்றது. இதில் ஒன்பது பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த குழு 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் கூடி அரசியல் அமைப்பை உருவாக்கியது.

 சுதந்திர இந்தியாவுக்கான அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்புச் சபை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. இந்த காலகட்டத்தில் இந்த சபை 165 நாட்களில் 11 அமர்வுகளை நடத்தியதாக மக்களவை வலைத்தளம் தெரிவிக்கின்றது.

 இதில் அந்த வரைவு (draft) செய்யப்பட்ட அரசியலமைப்பை ஆய்வு செய்வதற்கு மட்டும் 114 நாட்கள் செலவிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஒரு தனித் அரசியலமைப்புச் சபை அமைக்கப்பட்டது. அதனால் உறுப்பினர்கள் 299 ஆக குறைக்கப்பட்டனர்.

 1946ஆம் ஆண்டு ஜவகர்லால் நேருவின் 'குறிக்கோள்களின் தீர்மானம்'  (objectives resolution) முன்னுரையாக ஜனவரி 22, 1947 அன்று ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  

ஆகஸ்ட் 15 1947 இல் மாலை, சட்டமன்றம் மீண்டும் அரசியல் அமைப்பு மன்றத்தில் கூடி சுதந்திர இந்தியாவின் சட்டமன்றமாக பதவியேற்றுக் கொண்டது. 1947 ஆகஸ்டு 29 இந்த அரசியலமைப்புச் சபை இந்தியாவிற்கான வரைவு அரசியலமைப்பை தயாரிப்பதற்காக அம்பேத்கரின் தலைமையில் 17 குழுக்களில் ஒன்றான வரைவு குழுவை அமைத்தது.

 தாக்கல் செய்த 7635 திருத்தங்களில் 2473வை இக்குழு நீக்கியது. இறுதியில் சட்டமன்றத்தின் கடைசி அமர்வின் கடைசி நாளான நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 அனைத்து 283 உறுப்பினர்களும் கையெழுத்திட்ட பிறகு அடுத்த வருடம் அதாவது ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நாளிலிருந்து அரசியலமைப்புச் சபை இல்லாமல் போய், அது ஒரு தற்காலிகமான நாடாளுமன்றம் ஆக மாறியது.

 1952 இல் தேர்தலுக்குப் ஒரு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

 இந்திய அரசியலமைப்பு ஆங்கிலப் பதிப்பில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 369 சொற்களைக் கொண்ட உலகின் மிக நீண்ட கையால் எழுதப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும்.

இந்திய அரசியலமைப்பின் சில அம்சங்கள் பிரிட்டன், அயர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. 

1976ஆம் ஆண்டு 42வது திருத்தத்தில் 'சோஷலிசம்' என்ற வார்த்தை அரசியலமைப்பின் முன்னுரையில் எமர்ஜென்சி காலத்தில் சேர்க்கப்பட்டது. முன்னுரை இந்த ஒருமுறை மட்டுமே இதுவரை திருத்தப்பட்டுள்ளது.

 இந்த வருடம் இந்தியாவின் குடியரசு தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை வாசிக்க, வீடியோ கான்பரன்சிங் வழியாக அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகளும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தனர். 

Similar News