புதுச்சேரி: கேட்ட மாத்திரத்தில் தேடி வரும் உதவி - அதிரடி செயல்பாடுகளை உள்ளடக்கிய 104 உதவி எண் மையம் உருவானது!
புதுச்சேரி: கேட்ட மாத்திரத்தில் தேடி வரும் உதவி - அதிரடி செயல்பாடுகளை உள்ளடக்கிய 104 உதவி எண் மையம் உருவானது!
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட உடனேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக இலவச தொலைபேசி எண்களை அறிவித்தன.
சில மாநில அரசுகள் தரைவழி தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்ணை உதவி எண்களாக அறிவித்தன. தமிழ்நாடு அரசு 044-29510500 என்ற தொலைபேசி எண்ணையும் ஒடிசா அரசு 9439994859 என்ற மொபைல் எண்ணையும் அறிவித்தன.
குஜராத், பீகார், கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 104 என்ற பொது எண்ணையே உதவி எண்ணாக அறிவித்தன.
புதுச்சேரி அரசும் 104 என்ற பொது எண்ணையே கோவிட்-19 இலவச உதவி எண்ணாக அறிவித்தது. மத்திய அரசின் உதவி எண் +91-11-23978046 என்பது ஆகும்.
புதுச்சேரி சுகாதாரத் துறை 23-2-2020 அன்றே இந்த 104 இலவச எண் சேவையைத் தொடங்கி விட்டது. சுகாதார இயக்குனர் அலுவலக வளாக மாடியிலேயே இந்த உதவி எண்ணானது செயல்பட்டு வருகிறது.
இதுவே கோவிட்-19க்கான கட்டுப்பாட்டு அறையாகவும் செயல்படுகின்றது. 104 உதவி எண்ணில் 3 தொடர்பு இணைப்புகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறை 24X7 என்ற முறையில் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. மூன்று ஷிப்டுகளாக இயங்கும் இந்த அறையில் ஒவ்வொரு ஷிப்டுக்கும் ஒரு அலோபதி மருத்துவர், ஒரு ஆயுஷ் மருத்துவர் மற்றும் ஒரு மனநல ஆலோசகர் என மூவர் பணியில் இருக்கின்றனர்.
இந்த உதவி எண்களுக்கு 3 விதமாக அழைப்புகள் வருகின்றன. பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் முதல் வகை ஆகும்.
கொரோனா வைரஸ், தொற்றுக்கான வாய்ப்புகள், சிகிச்சை, மருத்துவமனை போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் இந்த உதவி எண்ணில் கேட்கின்றனர். அவர்களுக்குத் தகுந்த பதில்கள் தரப்படுகின்றன. பயம், பீதி, பதட்டம் மற்றும் மனக்கோளாறுகளுடன் இந்த உதவி எண்ணில் அழைப்பவர்களுக்கு மனநல ஆலோசனையும் தொலைபேசி வழியாகவே தரப்படுகிறது.