நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி - எரிவாயு ஆலை மற்றும் நிரப்பும் மையங்கள் செயல்பட துவக்கம்.!
நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி - எரிவாயு ஆலை மற்றும் நிரப்பும் மையங்கள் செயல்பட துவக்கம்.!
அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி-எரிவாயுத் திட்டத்தை, முன்னுரிமைக் கடன் வழங்கும் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி எரிவாயு ஆலைகள், மற்றும் உயிரி எரிபொருள் நிரப்பும் மையங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திரபிரதான், அரசின் இந்த நடவடிக்கை, அழுத்தத்தில் செயல்படக் கூடிய உயிரி-எரிவாயு உற்பத்தி ஆலைகளுக்கு கடனுதவி வழங்குவதை எளிதாக்கும் என்றார்.
புதிய திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில், உயிரி-எரிவாயு ஆலைகளுக்கான மத்திய நிதியுதவி அல்லது மானிய உதவிகள் வழங்குவது, 2020-2021வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உயிரி-எரிவாயு ஆலைகள், புதிய தொழில்முனைவோருக்கு, குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியவை என்றும் திரு.பிரதான் தெரிரவித்தார்.
"குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான புதிய கடன்தொகுப்புத் திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உயிரி-எரிவாயு ஆலைகளை அமைக்கவும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உயிரி-எரிவாயுத் திட்டங்களுக்கு, சர்வதேச நிதியுதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும்" அவர் தெரிவித்தார்.
குறைந்த செலவிலான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் நீடித்த மாற்றுத் திட்டமாக '(SATAT)' , உயிரி-எரிவாயுத் திட்டம், 1.10.2018 அன்று தொடங்கப்பட்டு, 2023-க்குள் 5,000 உயிரி-எரிவாயு ஆலைகள் மூலம் 15எம்.எம்.டி. எரிவாயு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமானதாக்க, மத்திய அரசு, பல்வேறு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு வங்கி நிதியுதவி கிடைக்க ஏதுவாக, உயிரி-எரிவாயுக்கு நீண்டகால அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய, எண்ணெய் விற்பனை நிறுவனங்களும் முன்வந்துள்ளன. உயிரி-எரிவாயு ஆலைகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான உப பொருளான உயிரி உரங்களை, 1985-ஆம் ஆண்டு உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.