சாத்தான் குளத்தில் காட்டப்பட்ட மனிதாபிமானமும், பரிவும் தென்காசி பக்கமும் காட்டப்பட வேண்டும் - கட்சிகளுக்கும், மீடியாக்களுக்கும் நடுநிலை சிந்தனையாளர்கள் வேண்டுகோள்.!
சாத்தான் குளத்தில் காட்டப்பட்ட மனிதாபிமானமும், பரிவும் தென்காசி பக்கமும் காட்டப்பட வேண்டும் - கட்சிகளுக்கும், மீடியாக்களுக்கும் நடுநிலை சிந்தனையாளர்கள் வேண்டுகோள்.!
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை ஜெயராஜ், அவரது மகன் பிலிப்ஸ் ஆகியோர் போலீசாரால் சரமாரியாக தாக்கப்பட்டு பலியான விவகாரத்தில் தமிழக மக்கள் அனைவரும் இந்த செயலை செய்த போலீசாரின் வக்கிர குணத்தை கண்டித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எவரும் இந்த அராஜக செயலை பாராட்டவில்லை. தவறு செய்த போலீசாருக்கு அதிக பட்சம் எவ்வளவு தண்டனை சட்டப்படி பெற்றுத்தர முடியுமோ அதை செய்ய வேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பொது மக்களின் இந்த கண்ணோட்டம் உண்மையில் ஒரு மனிதாபிமான கண்ணோட்டமாகும். ஆனால் இந்த சாத்தான்குள சம்பவத்தை முன்வைத்து சில அரசியல் கட்சிகளும், பல மீடியாக்களும் செயல்படும் விதத்தை பார்த்தால் பலியான 2 பேரின் பிணங்களை வைத்து ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதாயமாக இந்த சம்பவங்களை கொண்டு செல்வது நன்றாக கண்ணுக்கு தெரிகிறது.
போலீசார் செய்த தவறுக்காகவும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் தமிழக அரசு ரூ. 20 லட்சத்தை ஜெயராஜ் குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்குகிறது. அதே சமயம் திமுக சார்பில் இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ள கனிமொழியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ரூ.25 லட்சம் வழங்குகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பமோ அரசு நிவாரணத்தை ஆரம்பத்தில் மறுத்து பிறகு பெற்றுள்ளனர். ஆனால் திமுக அளித்த பணத்தை ஆர்வத்துடன் பெற்றுக் கொள்கிறார்கள்.
மீடியாக்களும் திமுக அளித்த நிவாரணத்துக்கு அதிக பட்ச விளம்பர முன்னுரிமை அளித்ததுடன் ஒட்டு மொத்த போலீசாரையும் மிருகங்கள் போல வருணித்து போலீசாருக்கு எதிராக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மீடியாக்கள் என்ன சொல்கின்றனவோ அதைப் பார்த்து சோஷியல் மீடியாக்களும் ஒட்டு மொத்த போலீசாரையே வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் சுகாதாரப் பணியாளர்களைப் போலவே போலீசாரும் ஒரு பக்கம் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து வருகின்றனர், அவர்களில் நூற்றுக்கணக்கான போலீசார் கொரோனா நோயில் சிக்கியுள்ளனர். சில போலீஸ் அதிகாரிகள் இறந்தே போயுள்ளனர். இந்த நிலையிலும் கொரோனா பணிகள் மட்டுமல்லாமல், இதர திருட்டு, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள், சொத்து தொடர்பான தகராறுகள், பந்தோபஸ்து பணிகள் என எல்லா வேலைகளையும் தங்கள் தலையில் சுமந்து எந்த எதிர்ப்பும் சொல்லாமல் தங்கள் கடமையை செய்து வருகின்றனர்.