இந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதனை - 12 மருத்துவமனைகளில் முதல் கட்ட சோதனை தொடங்கியது!

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதனை - 12 மருத்துவமனைகளில் முதல் கட்ட சோதனை தொடங்கியது!

Update: 2020-07-18 11:57 GMT

கோவேக்சின் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 375 பேர் மீது பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் இறங்கியுள்ளன. இதில், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இன்டர்நேசனல் மருந்து தயாரிப்பு நிறுவனமானது, தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம், மனிதர்கள் மீதான இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு முதன் முதலில் அனுமதியையும் பெற்று, முதல்கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளது.

375 பேரை கொண்டு நடத்தப்படும் இந்த பரிசோதனையில், தடுப்பூசியால் உடலில் ஏதேனும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறதா என ஆய்வு செய்யப்படும். இந்த பணியை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகள் மேற்கொள்கின்றன.

இந்த பரிசோதனையில் இடம்பெறுபவர்களில் சிலருக்கு உண்மையான தடுப்பு மருந்தும், சிலருக்கு தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத மருந்தும் கொடுக்கப்படும். யாருக்கு உண்மையான தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது, யாருக்கு கொடுக்கப்படவில்லை என்பது, மருந்தை கொடுப்பவருக்கோ, மருந்தை பெறுபவருக்கோ தெரியாது. இந்த விவரம் பரிசோதனை காலம் முடிவடைந்த பிறகே தெரியவரும்.

முதல் கட்டத்தில், எதிர்மறையான விளைவு ஏற்படுகிறதா என்பது மட்டுமே சோதிக்கப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என்பது, இரண்டாவது கட்டத்தில் பரிசோதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News