5 நாட்களில் நலம்: கொரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்!
5 நாட்களில் நலம்: கொரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்!
கொரோனா வைரஸ் நோயை சித்த மருத்துவத்தின் மூலம் 5 நாட்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கொரோனா மையங்களை தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளை குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனையாகவே தோன்றுகிறது.
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 160 பேரை 5 நாட்களில் நலமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்திருக்கிறார். சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் 3 வகையான சித்த மருந்து கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கொரோனா தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம்; கொரோனாவை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்மருந்துகளை பயன்படுத்தியதில் இரு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்த 160 பேரும், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகளும் இதுவரை இல்லாத வகையில் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது தான் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 2009-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பரவிய பன்றிக் காய்ச்சலை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்து வழங்கிய கபசுரக் குடிநீர் தான் பெருமளவில் கட்டுப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் பரவிய போது, அதைக் குணப்படுத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்த நிலவேம்புக் குடிநீரை காய்ச்சிக் குடிக்கும்படி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அந்த வகையில் பார்க்கும் போது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல. மாறாக கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி 35,556 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குணமடைந்தவர்கள் தவிர 16,067 பேர் இன்னும் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களில் நவீன மருத்துவத்துடன் கபசுரகுடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளையும் இணைத்து தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த முறையில் ஒருவர் குணமடைய சராசரியாக 14 நாட்கள் ஆகின்றன. ஆனால், சித்த மருத்துவ முறையில் 5 நாட்களில் நோயாளிகள் குணமடைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த முறையை கடைபிடிப்பதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயர்களை விரைவாக குணப்படுத்தி, சென்னையை கொரோனா வைரஸ் நோய் இல்லாத நகரமாக மாற்ற முடியும்.