உண்மையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணத்தையும் தாண்டி தங்கள் சொந்த ஊர், சொந்த மக்கள், குடும்பத்தினர் ஆகியோரின் மதிப்பை உணரவைத்தது இந்த கொரோனாவால் ஏற்பட்ட கொடுமை எனலாம். இந்த நிலையில் தங்கள் சொந்த ஊரிலேயே அவர்கள் தங்கி வாழ்வாதாரங்களுட்ன் வசிக்கும் வகையில் பிரதமர் மோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் " புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிகாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டத்தை நாளை சனிக்கிழமை ஜூன் 20 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கவுள்ளார் என கூறினார். அப்போது ₹50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டத்தை அவர் வெளியிடவுள்ளதாகவும் கூறினார்.
இந்த திட்டப்படி பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் வசிக்கும் 25,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் தனிப்பட்ட திறமைகளை அறிந்து 25 க்கும் மேற்பட்ட துறைகளை ஒன்றிணைத்து வாய்ப்புகளை வழங்க ₹50,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இந்த திட்டப்படி தொடர்ச்சியாக 125 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிகமானோர் நகர்ப்புறங்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பதால் அந்த அனுபவங்களை அரசு பொதுப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் கிணறுகள் கட்டுவது, சமூக சுகாதார பணிகள், தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல் , நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள், கிராமப்புறங்களில் வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட 25 பிரிவுகளில் அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
6 மாநிலங்களையும் சேர்ந்த 63.5 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பயனடைய உள்ளதாகவும், தொடர்ச்சியாக 120 நாட்களுக்கு அவரவர்களின் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர்களில் எத்தனை பேர் அங்கு தொடர்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், எத்தனை பேர் மீண்டும் புலம் பெயரவே விரும்புகிறார்கள் என்பதை பார்க்க இது ஒரு சந்தர்ப்பம் என்றும், அதன் பிறகுதான் உள்நாட்டு உற்பத்தியின் மீதான இதன் பாதிப்புகள் குறித்து அறிந்து கருத்து அதற்கேற்ப செயல்பட முடியும் என்றும் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.
இந்த நிலையில் கட்டிடப்பணிகளில் திறன் மிக்க அதிகப்படியான தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் தங்கள் ஊருக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு கடும் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. என தெரிகிறது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான நிறுவன மேலாளர் ஒருவர் கூறுகையில் வடமாநில தொழிலாளர்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் சென்று விட்டனர். அதனால் பெருமளவில் கட்டிடப்பணிகள் நின்று போய் உள்ளன. உள்ளூர் ஆட்களின் தேவை இப்போது உள்ளூரிலேயே சரியாக உள்ளது. பக்கத்து ஊர்களில் இருந்து அவர்களை நகர்ப்புறங்களுக்கு அழைத்து வருவதிலும் கொரோனா காரணமாக போக்குவரத்து பிரச்சினை உள்ளது. அவர்கள் கேட்கும் ஊதியமும் தற்போது மலைக்க வைக்கிறது.
இந்த நிலையில் சொந்த மாநிலங்கள் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால் இப்போது அங்குள்ள மாநில அரசுகளும், மத்திய அரசும் அறிவிக்கும் திட்டங்களால் அவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கட்டுமானத்துறை தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் முக்கிய பங்கு வைப்பது வடமாநில தொழிலாளர்கள். தற்போது அவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்துசென்று விட்டனர். அவர்கள் செல்லும்போதே தமிழக அரசு உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு உடனடி நிவாரணம் அளித்து அவர்கள் தமிழகத்திலேயே இருக்குமாறு தக்க வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் கட்டிடம் மட்டுமல்ல, அனைத்து துறை தொழில்களும் பெரும் சரிவை சந்திக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளதாக கூறினார்.