BSNL 4G சேவை - சீன உபகரணங்களை நிராகரிக்க மத்திய அரசு அதிரடி முடிவு
BSNL 4G சேவை - சீன உபகரணங்களை நிராகரிக்க மத்திய அரசு அதிரடி முடிவு
அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்புத் துறை நிறுவனம் சீன உபகரணங்களுக்கு 4ஜி மேம்படுத்துவதை நிராகரிக்க முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக மறு டெண்டர் விடவும் முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்க தனியார் ஆபரேட்டர்களைக் கேட்டுக்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
அதே நேரத்தில் இசட்இஇ நிறுவனம் அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2012-ஆம் ஆண்டில், அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் குழு சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொலைதொடர்பு நெட்வொர்க்குகளிலிருந்து இணைய உளவு அச்சுறுத்தல்களைப் பற்றி எச்சரித்ததுடன், ஹவாய் மற்றும் ZTE நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யக் கருதும் அமெரிக்க நிறுவனங்கள் வேறு மாற்று நிறுவனத்தின் விற்பனையாளர்களை தேட வேண்டும் என பரிந்துரைத்தது. இந்த குற்றச்சாட்டுகளை சீன நிறுவனங்கள் கடுமையாக மறுத்தன.
முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளர் ஹவாய், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கினை ஹேக் செய்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து அரசாங்கம் விசாரித்து வருவதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.