பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை கட்டுக்குள் வைக்க உத்தரவிடும் சீனா - இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பாகிஸ்தான்.!
பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை கட்டுக்குள் வைக்க உத்தரவிடும் சீனா - இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பாகிஸ்தான்.!
அண்டை நாடுகளுக்கு பலவிதங்களிலும் குடைச்சல் கொடுக்கும் வழக்கமுள்ள பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமே ஒரு அமைப்பு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது தான் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு. சீன ஆக்கிரமிப்பு ஜிங்ஜியாங் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்துக்கு செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலை கோரி செயல்பட்டு வந்த பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு தற்போது சீனாவுக்கும் தலைவலியாக அமைந்துள்ளது.
குவாதர் துறைமுகம் பலுசிஸ்தான் பகுதியில் இருப்பதால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அந்த பகுதியில் சீனா செய்து வரும் முதலீட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் 62 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள சீனாவுக்கு இது முக்கியமான திட்டமாகும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்திய கடற்படையின் ஆதிக்கம் அதிகமுள்ள மலாக்கா ஜலசந்தியின் வழியாக சீன கப்பல்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக குவாதர் துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து சரக்குகளை சீனாவுக்கு எடுத்து செல்லலாம்.
சீனாவுக்கு ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் கச்சா எண்ணெய் முக்கிய தேவையாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிறநாட்டு ராணுவங்களின் தொல்லை இன்றி எளிதாக சென்று வர சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடம் உதவியாக இருக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் பலுசிஸ்தானுக்கு அருகில் உள்ள சிந்து மாகாணத்தில் சீன தூதரகம் அமைப்பது, சீன பொறியாளர்களை குடியமர்த்துவது, மேலும் பல முதலீடுகள் செய்வது உள்ளிட்ட சீனாவின் திட்டங்களை பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு தவிடுபொடியாக்கியுள்ளது.