டிக்டாக்கிற்கு போட்டியாக மாறும் இந்திய செயலி.!
டிக்டாக்கிற்கு போட்டியாக மாறும் இந்திய செயலி.!
சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்னும் மக்களின் அழைப்புக்கு மத்தியில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியான சிங்கரி மக்களிடம் பிரபலமடைய துவங்கியுள்ளது.
இந்தியா மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைப்பாட்டின் காரணமாக மக்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியான சிங்கரி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த, மொபைல் டெவலப்பர்ஸ் ஆன சுமித் கோஸ்,பிஸ்வாத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் ஆகியோர் டிக் டாக் கிற்கு மாற்றாக இந்த சிங்கரி செயலியை உருவாக்கி உள்ளனர். 4 ஸ்டார் மற்றும் 23 ஆயிரம் ரிவியூஸ் உடன் ஒரு மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ள இந்த செயலியானது, டிக் டாக் கிற்கு போட்டியாக உள்ளது.
இதன் தலைவரான சுமித் கோஸ் ,இந்த செயலியை உருவாக்க இரண்டு வருடங்கள் தேவை பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர், இந்திய பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நவம்பர் 2018 ல் இந்த செயலி வெளியிடப்பட்டாலும், தற்போது தான் இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இந்திய பயனாளர்களிடம் இருந்து அதிக பதில்களை நாங்கள் பெறுகிறோம். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 25 லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தான் இந்தியாவில் உருவாக்கப்பட்ட டிக்டாக் கிற்கு எதிரான ஒரே செயலி என்றார்.
தகவலின்படி சிங்கரி, குஜராத்தி, மராத்தி, கன்னடா,பஞ்சாபி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. வீடியோக்கள் உருவாக்குவது மட்டுமின்றி, இந்த செயலியானது, பொழுதுபோக்கு செய்திகள், காமெடி வீடியோக்கள், பாடல் வீடியோக்கள், காதல் கவிதைகள் மற்றும் தகவல் மற்றும் பொழுது போக்கு செய்திகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிரவும் அனுமதிக்கிறது. மக்கள் இந்த செயலியில் வெளியிடும் வீடியோக்கள் பிரபலமாவதன் அடிப்படையில் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வழி வகை செய்கிறது. முதலில் அந்த வீடியோவை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பது புள்ளிகளாக மாற்றப்பட்டு பின்னர் பணமாக மாற்றப்படுகிறது.