ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக சிக்கலில் உள்ள வீட்டுவசதித் திட்டங்களுக்கு சிறப்பு அனுமதி – நிதியமைச்சர்.!
ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக சிக்கலில் உள்ள வீட்டுவசதித் திட்டங்களுக்கு சிறப்பு அனுமதி – நிதியமைச்சர்.!
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொளி மூலம் ஆய்வு செய்தார். நிதி அமைச்சகத் துறைகளின் செயலாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட் லிமிடெட் மற்றும் SBICAPS வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ரூ.8767 கோடி மதிப்பிலான 81 திட்டங்களுக்கு இந்த நிதியத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
SWAMIH முதலீட்டு நிதியம் - I திட்டம் கொள்கை அறிவிப்பு நிலையில் இருந்து, கள அளவில் செயல்படும் திட்டமாக முன்னேற்றம் கண்டுள்ளது. நாடு முழுக்க 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பதற்கான 81 திட்டங்களுக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்.சி.ஆர்., எம்.எம்.ஆர். பிராந்தியங்கள், பெங்களூரு, சென்னை, புனே போன்ற பெரிய நகரங்கள், இரண்டாம் நிலையாகக் கருதப்படும் கர்னல், பானிப்பட், லக்னோ, சூரத், டேராடூன், கோட்டா, நாக்பூர், ஜெய்ப்பூர், நாசிக், விசாகப்பட்டினம், சண்டீகர் போன்ற (பிற்சேர்க்கை 1) நகரங்கள் என பரவலாக இத் திட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 18 திட்டங்களில் முதலீடு செய்ய இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏழு குடியிருப்புத் திட்டங்களுக்கு (பிற்சேர்க்கை 2) பல்வேறு நிலைகளில் பணம் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கலில் இருக்கும் 353 திட்டங்கள் குறித்து விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. அவற்றுக்கு உதவி அளிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. இந்த கட்டுமானத் தலங்களின் திட்டங்களை விசேஷ அனுமதி சாளரம் திட்டத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் ஏராளமான தொழில் திறன் பெற்ற மற்றும் ஓரளவு தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வீட்டுவசதித் திட்டங்களில், வீடுகள் வாங்கியவர்களில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நிவாரணம் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த நிதியம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.