'சமூக சேவை செய்வதை நிறுத்திக் கொள்' எனக் கூறி வழக்கறிஞர் மீது சரமாரி தாக்குதல் - பம்மல் தி.மு.க. பிரமுகர் மகன் மீது போலீசார் நடவடிக்கை.!

'சமூக சேவை செய்வதை நிறுத்திக் கொள்' எனக் கூறி வழக்கறிஞர் மீது சரமாரி தாக்குதல் - பம்மல் தி.மு.க. பிரமுகர் மகன் மீது போலீசார் நடவடிக்கை.!

Update: 2020-07-15 04:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே உள்ள பம்மல் நகராட்சி பகுதி 15 ஆவது வார்டை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவா. இவர் அப்பகுதிகளில் பல்வேறு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக இவர் குரல் கொடுப்பவர் என கூறப்படுகிறது.

இவரது சமூக சேவை அப்பகுதியில் அரசியல் செய்துவரும் திமுக நகர செயலாளர் வெ. கருணாநிதி மற்றும் அவரது மகன் கண்ணப்பராஜ் ஆகியோருக்கு இடைஞ்சலாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணப்பராஜ் சிவாவுடன் அடிக்கடி தகராறு செய்து மிரட்டி வந்துள்ளதாகவும், இதனால் வழக்கறிஞர் சிவா அங்குள்ள சங்கர் நகர் காவல் நிலையத்தில் கண்ணப்பராஜ் மீது புகார் அளித்துள்ளதாகவும் 2 நாட்களுக்கு முன் செய்திகள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் போலீசார் கண்ணப்பராஜ் மீது வழக்கு பதிவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிவாவின் அலுவலகத்துக்கு சென்ற கண்ணப்பராஜ் இனிமேல் நீ சமூக சேவை செய்யக் கூடாது எனக்கூறி மிரட்டியதுடன் அவரை தாக்கியதாகவும் செய்திகள் வெளி வந்தன.

இதை அடுத்து வழக்கறிஞர் சிவா நேற்று முன் தினம் மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்த நிலையில், போலீசார் கண்ணப்பராஜ் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.    

Similar News