இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள "தர்மம்" என்ற அனைவருக்குமான செய்தியை மக்கள் பரவச் செய்ய வேண்டும் - குடியரசுத் துணைத்தலைவர்.!
இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள "தர்மம்" என்ற அனைவருக்குமான செய்தியை மக்கள் பரவச் செய்ய வேண்டும் - குடியரசுத் துணைத்தலைவர்.!
எல்லாக் காலத்திற்கும் நிலைத்திருக்கும் காவியமான இராமாயணத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள "தர்மம் அல்லது நியாயம்" என்ற செய்தியைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், அந்தக் காவியத்தின் அடிப்படை மதிப்பீடுகளின் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு எம்.வெங்கய்ய நாயுடு இன்று கேட்டுக் கொண்டார்.
"கோயிலைத் திரும்பக் கட்டுதல், மதிப்பீடுகளைப் போற்றுதல்" என்ற தலைப்பில் 17 மொழிகளில் இன்று வெளியிட்ட தனது முகநூல் பதிவில் குடியரசுத் துணைத்தலைவர் ஆகஸ்ட் 5இல் இருந்து அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட இருப்பதற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தருணத்தை ஒரு கொண்டாட்டமாக குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் இராமாயணத்தின் சாராம்சத்தை சரியான கண்ணோட்டத்தில் நாம் புரிந்து கொண்டால் சமூக ஆன்மீகப் புத்துயிர்ப்புக்கு அது வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார். அவர் இராமாயணத்தை தர்மம் அல்லது நியாயத்தின் பிரத்யேகமான இந்தியப் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு கதை என்று விவரிக்கிறார்.
இந்தத் தருணமானது காலம் கடந்தும் நிற்கும் இராமாயணத்தை நாம் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள உதவுவதாகக் குறிப்பிட்ட திரு.நாயுடு இந்தக் காவியம் நமது கூட்டு விழிப்புணர்வு நிலையின் ஒரு அங்கமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார். இராமர் எடுத்துக்காட்டான ஒரு குறிக்கோள் நாயகன் என்றும், அவரது வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் நேர்மையான மற்றும் பொறுப்பான சமூக ஒழுங்கமைவை நிர்ணயிப்பதற்கு மிகவும் முக்கியமானவை என்றும் திரு நாயுடு விவரித்தார்.
2000 ஆண்டுகள் பழமையான இந்தக் காவியத்தைப் புகழ்ந்த அவர் இராமாயணம் அனைவருக்குமான ஒரு பார்வையை வெளிப்படுத்துவதாகக் கூறினார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றின் கலாச்சாரத்தில் வெளிப்படையான மற்றும் ஆழ்ந்த தாக்கத்தை இந்தக் காவியம் ஏற்படுத்தியுள்ளது.
வேதம் மற்றும் சமஸ்கிருத அறிஞரான ஆர்தர் அந்தோணி மெக்டோனல் என்பரின் மேற்கோளை குறிப்பிட்டுக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் இந்தியப் பிரதிகளில் சொல்லப்பட்டுள்ள இராமரின் கருத்துக்கள் உண்மையில் மதச்சார்பற்றவை என்றும் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இவை மக்களின் வாழ்விலும், சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.