மங்கள் பாண்டே : இந்திய விடுதலைப் போரின் தீப்பொறி.! #MangalPandey #BirthAnniversary
மங்கள் பாண்டே : இந்திய விடுதலைப் போரின் தீப்பொறி.! #MangalPandey #BirthAnniversary
இந்தியக் கலகம் அல்லது சிப்பாய்க் கலகம் என்று அப்போது பிரிட்டாஷாராலும், பின்னாளில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அறியப்பட்ட 1857 கலகம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த மங்கள் பாண்டே என்ற சிப்பாய் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இன்று அவருடைய பிறந்த தினம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் தட்டி எழுப்பி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடுங்க வைத்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் பற்றிய உண்மையான தகவல்களை அடக்கிவைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பெருமளவு முயற்சி செய்தது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் என்ற புரட்சியை 'இந்திய சுதந்திரப் போர்' என்று அழைக்கக் கூடாது என்று தடை இருந்தது. அந்த தடையை மீறி அந்த தலைப்பில் புத்தகத்தை எழுதினார் என்ற காரணத்திற்காக சாவர்க்கர் பிரிட்டிஷாரால் துரத்தப்பட்டார். அந்த புத்தகத்தை வெளியிடக் கூட பிரிட்டிஷார் விடவில்லை, வெளிவருவதற்கு முன்பாகவே தடை செய்தனர்.
இப்போதும்கூட இந்த நிகழ்ச்சிகளை பற்றிய வரலாற்று கட்டுரைகளை படிக்கும்போது, பசு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவிய தோட்டாக்கள் மட்டுமே அந்தப் புரட்சிக்கு ஒரே காரணம் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது. (அந்தத் தோட்டாக்களை வாயில் வைத்த பிறகு லோட் செய்ய வேண்டும். பசு இந்துக்களுக்குப் புனிதமானது, பன்றி முஸ்லிம்களுக்கு அபத்தமானது) ஆனால் இதை மறுக்கும் சாவர்க்கர், தனது 'இந்திய சுதந்திரப் போர்' புத்தகத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபதியத்துக்கு எதிரான புரட்சியில் ஒரு தீப்பொறி தான் அந்த 'வதந்தி' என்றும், சிப்பாய்க் கலகம் அந்தத் தீப்பொறி இல்லையென்றாலும், வேறொன்றைக் காரணமாக வைத்து நடந்திருக்கும் என்று வாதிடுகிறார். இதைக் கருத்தில் கொண்டு மங்கள் பாண்டேவின் செயல்களை பார்ப்பது நலம்.
மங்கள் பாண்டே 1827 ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். 1849 ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், 34வது நேட்டிவ் பெங்கால் இன்பான்ரியில் ஆறாவது கம்பெனியில் சிப்பாயாக சேர்ந்தார்.
மார்ச் 29, 1857இல் என்ன நடந்தது என்று பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஆனால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்னவென்றால் மங்கள் பாண்டே இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்றும், ஒரு கலகத்தை உண்டாக்குமாறு தன்னுடன் இருந்த சிப்பாய்களை கேட்டுக் கொண்டதாகவும், பிடிபட்ட போது தன் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. பிறகு ஏப்ரல் 18ம் தேதி அன்று அவரைத் தூக்கிலிடும் படி தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவ்வளவு நாள் காத்து இருந்தால், மேலும் இது போல கலகங்கள் உண்டாகலாம் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு ,10 நாட்களுக்கு முன்பாக அதாவது ஏப்ரல் 8-ம் தேதியே அவருடைய தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. தன் 29ஆவது வயதில் இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த ஒரு மிகப்பெரிய கலகத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு அவர் உயிரிழந்தார்.