#Opinion : ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது, ஏன்? ஓர் அலசல்.!
#Opinion : ஹூவாய் போன்ற சீன நிறுவனங்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது, ஏன்? ஓர் அலசல்.!
லடாக்கில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல் பதற்றம் இரண்டு அரசியல் யதார்த்தங்களை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, சீன நிறுவனங்கள் இந்தியாவின் தொலைதொடர்பு அமைப்புகளில் நுழைவதை இந்தியா அனுமதிக்கக்கூடாது. எதிர்காலம் டிஜிட்டலாக இருக்கும் வாய்ப்புகளுக்கு மத்தியில், இந்தியாவின் பொதுத் தளத்திற்குள் சீனாவை டிஜிட்டல் ரீதியாக எப்போதும் அனுமதிக்கக்கூடாது. ஹவாய் அல்லது ZTEக்கு 5 ஜி சேவைக்கான உபகரணங்களை வழங்க இந்தியா உரிமம் வழங்கக்கூடாது.
இரண்டாவதாக, கடந்த காலத்தில் சில தொழில்துறை திட்டங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் போலவே, சீனாவை அடிப்படையாகக் கொண்ட எந்த நிறுவனத்தையும் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.
ஒரு மெல்லிய கருத்தியல் உடன்பாடு மற்றும் சொந்த வணிக நலன்களைத் தவிர, சீனாவைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் எதுவும் இந்தியாவில் இல்லை. ஜி ஜின்பிங்கிற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கிய ஒரு சர்வாதிகார ஆட்சி, தற்போது அனைவரிடமும் வம்பிழுத்து கேலிச் சித்திரம் போல் ஆகிக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவை "அமெரிக்காவின் நாயாக பணியாற்றும் பெரிய கங்காரு" என்று குறிப்பிட்டுள்ளது சீனா. அதற்கு அடுத்த நாடுகளின் வணிகச் சந்தைகளும், நிலங்களும் மட்டுமே வேண்டும். நல்லுறவு எதுவும் தேவையில்லை என்ற ரீதியில் பேசி வருகிறது.
லடாக்கில் உள்ள இந்திய எல்லைக்குள் அதன் ஊடுருவல்கள் இதன் ஒரு பகுதியாகும். இந்த விஷயங்கள் ராம் மாதவ், எச்.எஸ்.பனாக், ஹர்ஷ் வி.பந்த், காஞ்சன் குப்தா மற்றும் மனோஜ் ஜோஷி போன்ற நிபுணர்களால் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. இது ஹாங் காங் மற்றும் தைவானில் சீனா மூக்குடைப்பட்டு வருவதால், கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவும் இருக்கலாம். இந்தியா மீதான அதன் வெறுப்பு நிலையானது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பது, ஐநா சபையில் இந்தியாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகிவற்றின் மூலம் அந்த வெறுப்பை வெளிப்படுத்துகிறது. கடந்த பத்தாண்டுகளாக , இந்தியா வளைந்து கொடுக்க மறுப்பது சீனாவை விரக்தியடையச் செய்து, அதன் கோபத்தை மேலும் தூண்டுகிறது.