உதயநிதியின் கருத்தை புறந்தள்ளிய 'கர்ணன்' படக்குழுவினர் - ஆதங்கத்தில் புலம்பிய உதயநிதி!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படமான "கர்ணன்" வெளியாகியது. இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்த படம் பரவலாக சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்த நிலையில் 1997'ல் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கலவரம் நடந்ததாக குறிப்பிடப்பட்ட சம்பவத்தை பற்றி தி.மு.க'வின் உதயநிதி கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்த உதயநிதி, "'கர்ணன்' பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.
நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அ.தி.மு.க ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி" என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று ஞாயிற்றுகிழமை முதல் "கர்ணன்" படம் திரையிடப்படும் காட்சிகளில் 1997 என வரும் காட்சியில் 1990களின் பிற்பகுதி என படக்குழுவினர் மாற்றி காட்சியமைத்தனர்.
ஆனால் 1990களின் பிற்பகுதியும் தி.மு.கவின் ஆட்சிக்காலம்தான். தங்கள் கட்சியின் ஆட்சிகாலத்தில் நடந்த கொடுமையை ஒரு படைப்பாளி தழுவி படம் எடுப்பதை விரும்பாத தி.மு.கவினர் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நிற்கின்றனர். இதனைதொடர்ந்து உதயநிதி தனது ட்விட்டர் பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.