"ஏன்டா ஓட்டுக்கு காசு வாங்கிட்டு தெருவுக்கு லைட் வேற கேட்குறியா" என கேள்வி கேட்டவரை அடித்த தி.மு.க கவுன்சிலர்!

Update: 2021-04-27 02:30 GMT

"ஏன்டா ஓட்டு போட காசும் வாங்கிகிட்டு தெருவுக்கு லைட்ட வேற போட சொல்றியா? நான் யாரு தெரியும்ல தி.மு.காரன்" என ரவுடி போல் மக்களை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மிரட்டிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாட்டகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை கற்பகராஜ். இவர் தி.மு.க சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனாக இருந்து வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் மேலப்பாட்டகரிசல்குளம் பகுதியில் போட்டியிடும் போது அந்த பகுதிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்பைடை வசதிகள் ஏற்படுத்தித் தருவேன் என துரை மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். வெற்றி பெற்றபின் அப்பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறைக்கும் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் துரை மற்ற பகுதிகளுக்கு வசதிகள் செய்து தராமல் தான் வசிக்கும் பகுதிக்கு மட்டும் உயர்மின் கோபுர விளக்குகள், சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. அவர் வசிக்கும் பகுதிக்கு செய்ததைபோல் இதே போல மற்ற பகுதிகளுக்கும் சாலை, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுவந்த பொதுமக்களை துரை காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டீங்க உங்கள் பகுதிக்கு நான் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்? என திமிறாக கூறி மேலப்பாட்டகரிசல்குளம் பகுதி மக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பகத்சிங் என்ற இளைஞர் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார், அப்போது அங்கு வந்த துரையை வீடியோ எடுத்தப்படியே பகத்சிங் உரிமைக்குரல் எழுப்ப, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பொது மக்கள் முன்னிலையிலேயே பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்ட? எனக்கேட்டு ஆவேசமாக தாக்கியுள்ளார்

இப்போது உன்னால் என்ன செய்ய முடியும் போடா? நான் இந்த ஏரியாவில் பழைய ரவுடி கொலை செய்து விடுவேன் என அடித்து விரட்டியுள்ளார் கவுன்சிலர் துரை. இது குறித்து பகத்சிங், வீடியோ ஆதாரத்துடன் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து தி.மு.க ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News