"கெத்தா! மாஸா!! ஓஹோய்!!" என ஒரு சதவீதத்திற்கும் கீழே சென்ற தே.மு.தி.க வாக்கு வங்கி!

Update: 2021-05-04 04:45 GMT

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கட்சி வேகமாக வளர்ந்து எதிர்கட்சி வரை வந்து உடனே வேகமாக வீழ்ந்தது என்றால் அது தே.மு.தி.க மட்டுமே! 2006'ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் தனித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் களம் கண்டது.

எடுத்த முதல் தேர்தலிலேயே விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ'வாக வென்று மொத்த தே.மு.தி.க'வும் 8.4% சதவீதம் வாக்குகளை கைப்பற்றி தமிழக தேர்தல் வரலாற்றில் அசுரப்பாய்ச்சலை காண்பித்தது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளே ஆடிப்போயின. அந்தளவிற்கு இருந்தது விஜயகாந்த் அவர்களின் முதல் தேர்தல் களப்பணி மற்றும் பிரச்சார வியூகம்.

அடுத்து வந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க'வுடன் கூட்டணி அமைத்து தன் வாக்கு வங்கியை பயன்படுத்தி தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து எதிர்கட்சி வரிசையில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு இந்தளவு தமிழக அரசியலில் ஓரு கட்சியும் வளர்ச்சியடையவில்லை.

பின்னர் 2016'ம் ஆண்டில் முதன் முறையாக முதல்வர் வேட்பாளர் என்ற அடைமொழியுடன் 'மக்கள் நல கூட்டணி' அமைத்து ம.தி.மு.க மற்றும் வி.சி.க'வுடன் கூட்டணி கண்டார். விளைவு 2.4% சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது தே.மு.தி.க'வால்.

பின்னர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாது போக அவரது மனைவியும், மைத்துனரும் கட்சியை நிர்வகிக்கும் பொருப்பை கையில் எடுத்தனர். அதனைதொடர்ந்து சென்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் அ.தி.மு.க அரசுடன் இணக்கம் காட்டாமல் தனித்து சென்று டி.டி.வி.தினகரன் அவர்களுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்தித்தது.

இதன் பலனாக 8.4% சதவீதத்துடன் விஜயகாந்த் துவங்கிய கட்சி தற்பொழுது 0.43% சதவீத ஓட்டுக்களுடன் அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகரன் ஒரு வசனம் இணையத்தில் பிரபலம் "கெத்தா! மாஸா!! ஓஹோய்!!!" என, "இப்படி 8 % ஓட்டுக்களை 0.43% சதவீதம் கொண்டு வர எதுக்கு தம்பி கெத்து" என தே.மு.தி.க தொண்டர்களே விரக்தியில் கேட்டு வருகின்றனர்.

Similar News