ஆலங்குளம் தொகுதியில் தி.மு.கவின் வெற்றியை தட்டிவிட்ட ஹரிநாடார்!

Update: 2021-05-05 02:30 GMT

ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க வெற்றியை தட்டிவிட்ட ஹரிநாடார். சுயேட்சையாக போட்டியிட்டு வாக்குகளை அள்ளினார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் போட்டியிட்டனர். அதில், அதிகபட்ச வாக்கு களை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் பெற்றார்.

இந்த தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், 4 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள். வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 3,539 ஆகும்.

ஆனால், பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் 37,727 வாக்குகளை அள்ளினார். இந்தத் தேர்தலில், தமிழ்நாட்டிலேயே சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர் இவர்தான். நடமாடும் நகைக்கடையாக வர்ணிக்கப்படும் ஹரி நாடார் 12 கிலோ எடை கொண்ட நகைகளை எப்போதும் அணிந்திருப்பார். அந்த நகைகளுடன்தான் 2 மாதங்கள் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஹரி நாடார் பெற்ற வாக்குகள், தி.மு.க. வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டது.

இல்லையெனில் தி.மு.க'விற்கு இன்னும் ஒரு தொகுதி அதிகமாக கிடைத்திருக்கும்.

Similar News