"துரோகிகளின் பட்டியலில் முதல் ஆள்" என மகேந்திரனை குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.
நேற்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என கடிதம் அனுப்பியது பரபரப்பாகியது. அதற்கு பதில் கடிதமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "துரோகிகளின் பட்டியலில் முதல் ஆள்" என மகேந்திரனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிததத்தில் அவர், "சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம், ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள்' என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக்களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன்.
கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ள துணிந்தார்.
கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு 'அனுதாபம்' தேட முயற்சிக்கிறார்.
தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.