"உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குவீர்" என "திராவிட ஸ்டாக்" முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

Update: 2021-05-14 02:15 GMT

"உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குவீர்" என "திராவிடன் ஸ்டாக்" முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலமாக வைத்துள்ள வேண்டுகோள் வருமாறு, "கொரோனா என்கிற பெருந்தொற்று மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதை வென்று நாம் மீண்டு எழுவோம் என்பதை நிச்சயமாக தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் தற்போது இரண்டு முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று கொரோனா என்கிற பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று நிதி நெருக்கடி.

இந்த இரண்டையும் சமாளிக்கும் முன் முயற்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது. கொரோனா என்கிற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும், தொற்றுக்கு உள்ளானவர்களை காக்கும் பணியில் கண்ணுங்கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

ஈகையும், இரக்கமும், கருணையும், பரந்த உள்ளமும் கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஆக்சிஜன் பயன்படுத்தக்கூடிய படுக்கைகள், தடுப்பூசி மருந்துகள், கொரோனா தடுப்புக்கு தேவையான பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலக்கும் அளிக்கப்படும். நீங்கள் அளிக்கும் நிதி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவி கரமாக இருக்கும். தாராளமாக நிதி வழங்குங்கள்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Similar News