கொரோனோ தடுப்பூசி முகாம்களில் தி.மு.க-வினர் அராஜகம் - ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் அட்வைஸ்!

Update: 2021-05-31 04:45 GMT

கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்கு போடப்படும் முகாமில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், இந்த தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியும் சர்க்காரும் தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக்கூடாது. இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தன்மையுடன் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றார் பேரிஞர் அண்ணா. அண்ணாவின் பொன்மொழிக்கு முரணான சம்பவங்கள் தொடர்ந்து நறைபெற்று வருவது வருத்தத்திற்குரியது.


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட லக்காபுரத்தில் 7-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப் பணியாளர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தடுப்பூசி முகாமிற்கு சென்றதாகவும், ஆனால் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் பக்கவாட்டு வழியா தி.மு.க பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் முகாமிற்கு வெளியே நின்றிருந்த முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.




இதுபோன்ற சம்பவங்கள் முன்களப் பணியாளர்களை அலைக்கழிப்பதுடன், கொரோனா பரவல் அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இதுமட்டுமல்லாமல், முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுகவினர் இதுபோன்ற செயல் குந்தகம் விளைவிப்பது போல் உள்ளது. எனவே, ஒவ்வொரு பகுதியில் உள்ள முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, காவல்துறையினரின் உதவியுடன், சமூக இடைவெளியைக் கடைபிடித்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்" முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Similar News