'அரசு மருத்துவமனையில் என் புருஷனை கொன்னுட்டாங்க' : கதறும் அப்பாவி பெண்!

Update: 2021-07-02 00:45 GMT

"நாகை அரசு மருத்துவமனை அலட்சியம் என் கணவர் உயிரை பறித்தது" என மனைவி புகார் எழுப்பியதால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த ராஜேஷ், தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 12.06.2021 -ம் தேதி முதல் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். ராஜேஷுக்கு தனி ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், பைப் லைன் வழியாக சீகாப் மானிட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 23 -ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தில் வால்வு பழுதாகவே நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அவரது மனைவி சுஹாசினி கூறுகையில், "எனக்கும், என் கணவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று வந்த நிலையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தோம். 6 நாள்ல நான் குணமடைந்தேன். அதுக்கப்புறம் என் கணவரை கூடவே இருந்து கவனிச்சுகிட்டேன். என் கணவர் நல்லபடியா உடல்நலம் தேறிட்டு வந்தார். சம்பவத்தன்னைக்கு நைட் 8 மணிக்கு சாப்பிட்டார். நல்லா பேசிகிட்டு இருந்தார். "இன்னும் நாலு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம்னு" சொன்னார். ஆசையாய் கடலை மிட்டாய் கேட்டு வாங்கி சாப்பிட்டார். 9 மணிக்கு திடீர்னு ஆக்சிஜன் குழாயில பழுதுன்னு ஆக்சிஜனை நிறுத்திட்டாங்க. எல்லோருக்கும் பதற்றம். தனி சிலிண்டரில் இருந்தவங்களை அப்புறப்படுத்திட்டாங்க" என கதறினார்.

மேலும், "என் வீட்டுக்கார் மூச்சுவிட முடியாம அவதிப்பட்டதும் நான் அழுது கத்தறேன். ஒவ்வொருத்தர் காலிலும் விழாத கொறையா கெஞ்சறேன். அதற்குள் அரை மணி நேரம் ஆகிப்போச்சு. கடைசியா மாடி ரூமுக்கு தூக்கிட்டு போனாங்க. அப்பறம் பொட்டலமா கட்டி குழியில மூடிட்டாங்க. இனி ரெண்டு பெண் புள்ளைகளை வச்சிகிட்டு நான் எப்படி வாழ்வேன்?, நிர்வாக அலட்சியத்தால என் கணவர் உசுரு போய்ட்டு" என உடைந்து நின்றார்.

இதுபற்றி அவர் மனைவி புகார் எழுப்பியதால் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Source - ஜூனியர் விகடன்.

Similar News