"கொங்குநாட்டை நிர்வாக வசதிக்காக தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்" - கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி!

Update: 2021-07-13 02:30 GMT

"கொங்குநாட்டை நிர்வாக வசதிக்காக தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்" என கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி நேற்று பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாடு மாநிலம் 12 மாவட்டமாக இருந்தநிலையில் தற்போது 38 மாவட்டமாக பிரிந்து 34 அமைச்சர்கள் வரை இருக்கின்றனர். வரிவருவாய் அதிகம் கொடுத்தாலும் கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் வரி வருவாய் 66 சதவீதம் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்துதான் அரசுக்கு செல்கின்றது. வருவாயை பெற்றுக்கொண்டு இந்த பகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை.

நிர்வாக வசதிக்காக கொங்குநாடு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் இன்னும் வளர்ச்சி ஏற்படும். 1976 ல் இருத்து இந்த கோரிக்கை முன்வைத்து வருவதாகவும் , கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் தங்களின் எண்ணம்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம். அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து கொங்குநாடு கோரிக்கையினை வலுப்படுத்துவோம். கொங்கு நாடு கோரிக்கை தொடர்பாக பிரதமரை விரைவில் சந்திக்க இருக்கின்றோம்''என அவர் தெரிவித்தார்.

Similar News