பா.ஜ.க சித்தாந்தம் தமிழக மண்ணை சார்ந்தது தான் - அண்ணாமலை!

Update: 2021-07-25 15:00 GMT

"தமிழக மக்களுக்கு ஆன்மிக தேடல் இருக்கிறது" என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இன்று திருவண்ணாமலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பா.ஜ.க'வின் சித்தாந்தம் என்பது தமிழ் மண்ணை சார்ந்ததுதான். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்துதான் கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெளர்ணமி, கார்த்திகை தீபத்துக்கு யாருமே அழைக்காமல் பல லட்சம் பேர் வருகிறார்கள். தமிழக மக்களுக்கு ஆன்மிக தேடல் இருக்கிறது. ஆன்மிகத்துடன் வாழ்க்கை பயணத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகத்தான் கோயிலை புண்ணிய தலமாக மக்கள் பார்க்கிறார்கள்.

கிரிவலம் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு விதி வகுத்திருக்கும்போது, அதை பின்பற்றுவது எல்லோருடைய கடமை" என்றார் அவர்.

மேலும் பேசியவர், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய சேவை அமைப்பு ஆகும். அதற்கு ஈடு எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் Z பாதுகாப்பில் உள்ளார். அவர் வருகையின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கம். சாலையில் உள்ள வேகத்தடை போன்றவற்றை தவிர்ப்பார்கள், மதுரை மாநகராட்சி துணை ஆணையர் அவருடைய உத்தரவில் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு மதுரை எம்.பி. கடிதம் எழுதுகிறார். உடனே, அரசு துரித நடவடிக்கை எடுக்கிறது. இச்செயல் கண்டனத்துக்குரியது. அரசின் எண்ணங்கள் என்ன என்பதை இது பிரதிபலிக்கிறது. இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு பா.ஜ.க கடிதம் எழுதியிருக்கிறது. தவறு செய்யாத அந்த அதிகாரியை மீண்டும் பணி வழங்க வேண்டும்" என்றார்.

Similar News