"கோவில், பள்ளி எல்லாத்தையும் மூடிட்டு டாஸ்மாக் திறந்து வச்சா கொரோனோ போய்டுமா?" - ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் கேள்வி
"ஒருபுறம் பள்ளி, கல்லூரி, வழபாட்டுதலம் என அனைத்தையும் மூடிவிட்டு மறுபுறம் டாஸ்மாக கடையை திறந்துவைத்தால் கொரோனோ போய்விடுமா" என தி.மு.க அரசுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனோ மூன்றாம் அலை மின்னல் போல் பரவி வருகிறது. தி.மு.க அரசு டாஸ்மாக் மதுபான கடையை தவிர அனைத்திற்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுபானகடை வழக்கம்போல் கூட்டத்துடன் செயல்படுகிறது. இதனை குறிப்பிட்டு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நேற்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி பார்த்தால், 1,39,253 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க'வினுடைய வாதத்தின்படி எட்டு சதவீத பாதிப்பு உள்ள இந்நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத தி.மு.க அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது என்பது கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாக, தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும்" என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.