ஆசி வாங்க சென்ற தி.மு.க. வேட்பாளரை செருப்பால் அடித்து விரட்டிய நிர்வாகியால் ரகளை.!

Update: 2021-03-13 00:45 GMT

சீட் கிடைக்காத அதிருப்தியில் விருகம்பாக்கம் தி.மு.க. வேட்பாளரை கே.கே. நகர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க. சார்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜாவின் மகன் பிரபாகர் ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில் தனக்கு சீட் கிடைத்த மகிழ்ச்சியில் பிரபாகர் ராஜா தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரரிடம் வாழ்த்து பெற சென்றபோது அவர் பிரபாகர் ராஜாவை செருப்பால் அடித்து விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத ஆத்திரத்தில் தனசேகரர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. இதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா மற்றும் பகுதி செயலாளர் கண்ணன் ஆகியோரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கட்சி பதவியில் இருக்கும் இருவரும் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தி.மு.க. சார்பாக பல்வேறு தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் தற்போது கோஷ்டி மோதலின் உச்சகட்டமாக தி.மு.க. வேட்பாளரை திமுகவை சேர்ந்தவரே செருப்பால் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியிட சீட் கிடைத்த சந்தோஷத்தில் தன்னைப் பார்த்து ஆசி வாங்க வந்தவருக்கு அடிப்படை மரியாதை கூட வழங்காமல் செருப்பால் அடித்து விரட்டும் இவர்கள் எல்லாம் நாளை வெற்றி பெற்றபின் மக்கள் தேடிச் சென்றால் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற அச்சத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

Similar News