"அட விடுங்கப்பா இந்தத் தேர்தலுடன் தி.மு.க காணாமல் போய்விடும்" - கெத்தாக கூறும் தம்பிதுரை!

Update: 2021-04-07 10:00 GMT

"அட விடுங்கப்பா இந்தத் தேர்தலுடன் தி.மு.க அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும்" என அரசியல் ஆரூடம் கூறியிருக்கிறார் அ.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை.

நேற்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களித்த பின்னர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், "2016'ல் சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியை முன்னின்று தேர்தலை சந்தித்தார்.

இப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை முன்னின்று நடத்திவருகிறார்கள். கடந்த 4 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியைத் தந்துள்ளார். அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்த முறை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக வென்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்" என்றார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "தி.மு.க ஒரு குடும்பக் கட்சி. வாரிசு அரசியல் நடத்தும் கட்சி. 2ஜி, 3ஜி என அனைத்திலும் ஊழல் செய்த கட்சி. இந்தத் தேர்தலுடன் தி.மு.க அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும்" என முடித்துக்கொண்டார்.

Similar News