தமிழகத்தில் உள்ள 11 மது ஆலைகளில் 7 தி.மு.க ஆதரவாளர்களுடையது - அம்பலப்படுத்தும் மரு.ராமதாஸ்!

Update: 2021-06-20 05:15 GMT

அண்ணா'வின் ஆட்சி தருவோம் என கூறிக்கொண்டு ஆட்சியை பிடித்து பின்னர் அண்ணா'வின் கொள்கைக்கு எதிராக தி.மு.க செயல்படுவதாக பா.ம.க நிறுவனர் மரு.ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில் அறிக்கை வெளியிட்ட அவர் தமிழகத்தில் செயல்படும் மது ஆலைகளில் 11'ல் 7 தி.மு.க ஆதரவாளர்களுக்கு சொந்தமானது என அம்பலப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

"அண்ணாவின் மது விலக்கு உறுதியும்

தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும்!

அன்று அண்ணா - மதுவை தடுத்த வரலாறு!

தமிழ்நாட்டில் 1948-ஆம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வந்தது. 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்றது. அப்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிலைமையை சமாளிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க அண்ணா மறுத்து விட்டார்.''அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது!" என்று கூறினார். அதுமட்டுமின்றி, "மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்"என்றும் கூறி மதுவிலக்குக் கொள்கையில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

'மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன். இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்' என்று கூறி மதுக்கடைகளை திறக்கும் யோசனையை அண்ணா நிராகரித்தார்.

இன்று - மதுவுக்கு சாமரம்

அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் 1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்தார். அதுமட்டுமின்றி 2006 -11 ஆட்சிக் காலத்தில் 5 புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்தார். தமிழ்நாட்டில் இப்போது செயல்பாட்டில் உள்ள 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது!" என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News