கடந்த 2019 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது வராத சந்தேகம் தற்பொழுது தி.மு.கவிற்கு வருவது ஏன்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க சார்பில் அமையப்பெற்ற கூட்டணி வெற்றி பெற்ற பொழுது வாக்கு எண்ணும் இயந்திரத்தின் மீது வராத சந்தேகம் தற்பொழுது 2021ல் தி.மு.கவிற்கு வாக்கு எண்ணும் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று தனது குடும்ப சகிதமாக ஓய்வெடுக்க தனி விமானம் மூலம் கொடைக்கானல் சென்ற ஸ்டாலின் ஓய்வு நேரத்திலும் கூட வாக்கு இயந்திரங்கள் என்னவாகுமோ என்ற சந்தேகத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை 'சுவிட்ச் ஆஃப்' (பேட்டரிகளை எடுக்காமல் - செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.
அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. ஏப்ரல் 7 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள்.
இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்தப் பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது.