30ம் தேதியன்று பா.ஜ.கவினர் தயாராக இருங்கள் - ஆட்டத்தை துவங்கிய தமிழக பா.ஜ.க!

Update: 2021-05-27 06:30 GMT

வரும் மே 30ம் தேதியன்று தமிழக பா.ஜ.கவினர் தயாராக இருங்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பரபரப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை, மக்களுக்கு தொண்டாற்றும் தினமாக கொண்டாட வேண்டும் என எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "பாரதிய ஜனதா கட்சி 2014ம் ஆண்டு முதல் 2019 வரையிலும், 2019 தொடங்கி வரும் 30ம் தேதியோடு ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே வருகிற 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும்.

தடுப்பு ஊசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரத்த தான முகாம்கள், தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கொரானா சிகிச்சைக்காக மக்களுக்கு தேவையான உதவிகள் என பல்வேறு விதமான மக்கள் சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பூத் அளவிலும் நடக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நிர்வாகிகளும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, அந்த ஒரு நாள் முழுவதும் அந்த கிராமத்திலிருந்து சேவைப் பணி ஆற்ற வேண்டும்.

அதே வேளையில் தளர்வில்லா ஊரடங்கு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பாதுகாப்பாக சேவைப்பணிகளில் ஈடுபட வேண்டும்" எனவும் பா.ஜ.க தொண்டர்களுக்கு எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News