எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே 14ம் தேதி கட்சி அலுவலகத்திற்குள் அனுமதி.. அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு.!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வருகின்ற ஜூன் 14ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வருகின்ற ஜூன் 14ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் வருகின்ற 14.06.2021 திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், எம்.எல்.ஏ., ஐ.டி. கார்டு உடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
14.06.2021 அன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தலைமைக் கழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.