தி.மு.க., அரசை குறை கூறினால் பொய் வழக்கு போடுவீர்களா.. அ.தி.மு.க. கண்டனம்.!

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் தமிழ்நாட்டு மக்களை வாட்டி, வதைக்கத் தொடங்கிவிட்டன.

Update: 2021-06-17 11:50 GMT

அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் தமிழ்நாட்டு மக்களை வாட்டி, வதைக்கத் தொடங்கிவிட்டன.

10 ஆண்டுகாலம் தலைகாட்டத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. பட்டப்பகலில் சட்டவிரோதச் செயல்களில் எவ்வித கூச்சமோ, அச்சமோ இன்றி திமுகவினர் வெட்ட வெளிகளிலும், வீதிகளிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அலுவலகங்கள் சுதந்திரமாக பணிசெய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில், வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி தனது இருப்பையும், இயல்பையும் காட்டிக் கொள்கிறது.

ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக்கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுகவினர் தங்களது முழு வரம்பு மீறலையும் மாநிலமெங்கும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினரின் தவறுகளையும், தலையீடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏவிவிடுவதில் திமுகவினர் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக உள்ளனர்.

காவல் துறையினரின் துணைக்கொண்டு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களையும் பொய் வழக்கு போடும் அடாத செயல்களிலும் திமுகவினர் ஈடுபடும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

திமுகவினரின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரம் இருக்கையில், அராஜகத்திற்குத் துணைபோகும் செயலில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும்.

பழிவாங்கும் நோக்கத்தோடு அதிமுகவினர் மீதும், அநீதிகளையும், அராஜகங்களையும், ஆட்சியின் அலங்கோலங்களையும் தட்டிக் கேட்கும் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், பொய் வழக்கு போடுவதும், தாக்குதல் நடத்துவதுமான செயல்களை திமுக தலைமை தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாதிக்கப்படக்கூடிய தகவல் தொழில்நுட்பப் பிரிரைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சிக் கழக நிர்வாகிகளோடு, கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளோடும் கலந்துபேசி அவர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் எதிர்த்துக் களமாடுவதற்கு கழக வழக்கறிஞர் பிரிவு தயார் நிலையில் இருக்கிறது. அதை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கழக வழக்கறிஞர் பிரிவு எதிர்க்கட்சி என்ற பிரதானமான வாய்ப்பைப் பயன்படுத்தி, சட்ட நெருக்கடியை திமுகவிற்கும், அதன் தலைமையிலான அரசிற்குள் தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக புதுவெள்ளத்தில் மிதந்து வரும் நுரை பூ அல்ல ஊதி விளையாட, தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர். எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது. அமைதியாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் ஜனநாயகக் கடமையாற்றி வரும் கழகத்தினரையும், பல்வேறு அணியினரையும், தகவல் தொழில்நுட்பப் பிரிவினரையும் அச்சுறுத்துவதால் கழகம் அடங்கிப் போகும் என்று தப்புக் கணக்குப் போடாமல், தலைகால் தெரியாமல் ஆட்டம் போடாமல், நல்லாட்சி நடத்துவதில் கருத்தையும் செலுத்துவது, வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமை திமுகவுக்கும் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News