தி.மு.க., அரசை குறை கூறினால் பொய் வழக்கு போடுவீர்களா.. அ.தி.மு.க. கண்டனம்.!
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் தமிழ்நாட்டு மக்களை வாட்டி, வதைக்கத் தொடங்கிவிட்டன.
அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து திமுகவின் இயற்கை குணாதிசயங்கள் தமிழ்நாட்டு மக்களை வாட்டி, வதைக்கத் தொடங்கிவிட்டன.
10 ஆண்டுகாலம் தலைகாட்டத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. பட்டப்பகலில் சட்டவிரோதச் செயல்களில் எவ்வித கூச்சமோ, அச்சமோ இன்றி திமுகவினர் வெட்ட வெளிகளிலும், வீதிகளிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள் சுதந்திரமாக பணிசெய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில், வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி தனது இருப்பையும், இயல்பையும் காட்டிக் கொள்கிறது.
ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக்கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுகவினர் தங்களது முழு வரம்பு மீறலையும் மாநிலமெங்கும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆளும் கட்சியினரின் தவறுகளையும், தலையீடுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏவிவிடுவதில் திமுகவினர் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக உள்ளனர்.
காவல் துறையினரின் துணைக்கொண்டு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களையும் பொய் வழக்கு போடும் அடாத செயல்களிலும் திமுகவினர் ஈடுபடும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
திமுகவினரின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரம் இருக்கையில், அராஜகத்திற்குத் துணைபோகும் செயலில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகமே ஆகும்.