லீலா மணிமேகலை மீது போலீஸ் கமிஷ்னர் அலுவலத்தில் பா.ஜ.க அதிரடி புகார்

Update: 2022-07-08 13:01 GMT

இந்து கடவுளான காளி தெய்வத்தை இழிவுபடுத்தும் விதமாக கையில் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியிட்டுள்ள இயக்குனர் லீனா மணிமேகலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அவர் தயாரித்துள்ள ஆவணப்படத்தை தடை செய்யவும் பா.ஜ.க.வின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் பா.ஜ.க.வில் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவராக இருக்கிறேன். சமீபத்தில் இந்துக்கள் புனிதமாக வணங்கும் காளி தெய்வம் பற்றி இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்துகின்ற வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை பூர்வீகமாக கொண்ட லீனா மணிமேகலை என்ற ஆவணப்பட இயக்குனர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் காளி தெய்வத்தை போன்று வேடம் அணிந்த பெண்ணின் கையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பின் கொடியும், வாயில் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்டத்தை சமூக வலைதளத்தில் அவர் தனது ஆவணப்படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார்.

மேலும், லீனா மணிமேகலை ஒரு கடவுள் மறுப்பு சிந்தனையாளர். எனவே அவர் அடிப்படை புரிதல் எதுவும் இன்றி இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கைகளையும், எண்ணத்தையும் அவமதிப்பு செய்யும் விதமாக காளி தெய்வத்தின் புகைப்படம் உள்ளது. மேலும், கையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற கொடியையும் அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மிகப்பெரிய கலவரத்தை தூண்டும் விதமாக லீனா மணிமேகலையின் எண்ணம் இருக்கிறது. தனது ஆவணப்படத்தின் விளம்பரத்திற்காக காளியை தவறாக சித்தரித்துள்ளார். எனவே அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News