மருத்துவர்கள் தான் கடவுள்கள்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உருக்கமான அறிக்கை.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போன்றவர்களுக்கு மருத்துவர்கள்தான் கடவுளாக இருந்து காட்சி அளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-05-18 05:58 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போன்றவர்களுக்கு மருத்துவர்கள்தான் கடவுளாக இருந்து காட்சி அளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 40 ஆண்டுகளுக்கு முன் நான் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த காலம். நோயால் பாதிக்கப் பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வருவார்கள். ''அய்யா நீங்கள் தான் எங்களுக்கு கடவுள் மாதிரி. நீங்க தான்யா இந்த உயிரை காப்பாற்ற வேண்டும்'' என்பார்கள்.


 



இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் உயிரையும் பணயம் வைத்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தான் உண்மையான கடவுள்களாக பார்க்கப்படுகின்றனர்.

அந்தக் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மருத்துவம் அளித்தால் போதுமானது. சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு எந்த ஆபத்தோ, அச்சுறுத்தலோ இல்லை. ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கும் நோய் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது.


 



கொரோனா சிகிச்சையின் போது நோய் தொற்றிக் கொண்டதால் கடுமையான நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை ஏராளம்.... ஏராளம்.

இவ்வளவையும் கடந்து கொரோனா பாதித்த மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவம் அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்... அவர்களை வணங்குவோம்!

Similar News