வாடிய மக்கள் இனி முன்னேறட்டும்.. 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து ராமதாஸ் அறிக்கை.!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை நேற்று காலை வெளியிடப்பட்டது. அதில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான 20% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு இல்லாமல் தான் செயல்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 8/2021 கடந்த பிப்ரவரி 26&ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது; வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
எனது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, 10.50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை 200 புள்ளி ரோஸ்டர் பட்டியலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிடச் செய்துள்ளார். மாணவர் சேர்க்கை அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த பிழையை சுட்டிக்காட்டிய சில மணி நேரங்களில் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரி செய்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.