மகன் உதயநிதி ரகசியத்தை பயன்படுத்தி நீட்டை ரத்து செய்யலாமே: ஸ்டாலினை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி!

Update: 2022-02-06 09:00 GMT

தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதியை அளித்து சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கூறிய ரகசியத்தை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே எனவும் கலாய்த்து தள்ளியுள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் வாய் வார்த்தையால் மக்களை ஏமாற்றி வருகின்றார். திமுக என்றாலே தில்லு முள்ளு கட்சி, எனவே அவர்களுடன் அதிமுகவினர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்தனர். அதன் பின்னர் மக்களை மறந்துவிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 8 மாதமாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஸ்டாலின் சைக்கிளில் செல்கிறார், நடைபயிற்சி செய்கிறார். டீக்கடையில் டீ குடிக்கின்றார். இதை தவிர மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யும் காட்சிகளை நாம் பார்க்க முடியவில்லை.

மேலும். கிராம பகுதி மாணவர்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலமாக 574 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். தேர்தல் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொய்யான வாக்குறுதியை அளித்தனர். அது மட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. அதனை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார். அந்த ரகசியத்தை ஸ்டாலின் தெரிந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யலாமே என்று பங்கமாக கலாய்த்துள்ளார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Times Now

Tags:    

Similar News