"சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு" - ஜி.கே.வாசன் !

Update: 2021-12-04 05:30 GMT

சித்திரை முதல் நாளே புத்தாண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு நிரந்தர அங்கீகாரம் தமிழக அரசு அளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "சித்திரை மாதம் முதல் நாளே ஆண்டின் துவக்கமாக இருக்க வேண்டும் என்ற கோடான கோடி தமிழர்களின் எண்ணத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழர்களுக்கான புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்பதற்கு வாழ்வியல் காரணங்களும் உண்டு.

தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடியதை வரலாறு தெரிவிக்கிறது. பெரியோர்கள் சித்திரை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாக கொண்டாடினார்கள். குறிப்பாகத் தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14-ந்தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழர்க்கு சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது. எனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், தமிழ் மொழி உணர்வாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் கோரிக்கையான சித்திரை முதல் நாளே புத்தாண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு நிரந்தர அங்கீகாரம் அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Maalaimalar


Tags:    

Similar News