வரிசையில் நின்று பிரியாணி வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ.. இளைஞர்கள் செல்பி எடுத்து கொண்டாட்டம்.!

வரிசையில் நின்று பிரியாணி வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ.. இளைஞர்கள் செல்பி எடுத்து கொண்டாட்டம்.!

Update: 2021-02-22 18:57 GMT

மதுரையில் அதிமுக கட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது தொண்டர்களுடன் வரிசையில் கையில் தட்டுடன் நின்று பிரியாணி வாங்கிய சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மதுரை, காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி கட்சியினரிடையே அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அனைவருக்கும் பிரியாணி போடப்பட்டது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூவும் கையில் தட்டுடன் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சாப்பிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த காட்சியை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
 

Similar News