இந்த சட்ட ஒழுங்கற்ற மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்க போகிறார்? அண்ணாமலை கேள்வி!

Update: 2024-01-27 12:35 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லுவழி கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பன் உபகார மேரியின் மகன் வெளிநாட்டில் பணியாற்றுவதால் மகனின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் மாமனாரான சின்னப்பன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென்று இரவு வேளையில் சின்னப்பனின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீதும் அறிவாளால் வீசி வெட்டி உள்ளனர். இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டம் ஒழுங்கை காப்பாற்ற திறனற்ற முதல்வர் ஸ்டாலின் இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்க போகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 


இது குறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலை, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், பொதுமக்கள் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குரியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு இதை விடக் கீழ்நிலைக்குச் செல்ல முடியாது என்றிருக்கையில், தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.  


சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். திமுக அரசின் கையாலாகாத்தனத்தால், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


ஒரு அரசின் அடிப்படைக் கடமையான, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்? என பதிவிட்டுள்ளார். 

Source : Asianetnews Tamil 

Similar News