போலி வாக்குறுதி என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை விமர்சனம்!!

Update: 2024-03-20 09:58 GMT

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தனது கூட்டணி மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதனை அடுத்து தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவில் போலி வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும் தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள் என விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது. 

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News