பயிர்கடன் குறித்து கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? அமைச்சர் பெரிய கருப்பன் மீது அண்ணாமலை சீற்றம்!
பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பொய்யை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
பயிர் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் எழுப்பிய கேள்விக்கு ஊர் உறங்கிய பின்னர் நள்ளிரவில் அமைச்சர் பெரிய கருப்பன் பதில் அளித்து இருக்கிறார். திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அமைச்சருக்கு அதனை நம்பிக்கை. கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூபாய் 1210.74 கோடி கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்தோம் என்று அமைச்சர் பெரியகருப்பன் பொய்யை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் .
தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பிலேயே கடந்த 2021 - 2022 முதல் 2023 2024 வரை தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர் கடன் ரூபாய் 4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டி தொகை ரூபாய் 1430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது .இதை எப்படி கூட்டினாலும் அமைச்சர் கூறும் ரூபாய் 1210.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்றுதோற்று இருக்கிறார். அமைச்சர் கணித பாடத்தில் முதலமைச்சர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
அப்படி இருக்கையில் இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா? நான்காண்டு கால விவசாயிகளுக்கு செய்த திட்டங்கள் என பட்டியலிட்டு இருக்கும் அமைச்சர் விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு,டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடிய 16 ஆயிரம் விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்து இருந்தால் அந்த பட்டியல் நிறைவு பெற்றிருக்கும் .நகை கடன் கல்வி கடன் பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து பொதுமக்களை கடனாளியாக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதை கேள்வி கேட்டால் உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.