பா.ம.க. நிர்வாகிகளை சமூக ஊடகங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை.. அதிரடி காட்டும் ராமதாஸ்.!

பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன்.

Update: 2021-06-17 10:48 GMT

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சி ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாக பழகி வருபவர்கள் என்பது தான் நாம் பெருமைப்படும் விஷயமாகும். அண்மைக்காலமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைத்தூக்க தொடங்கியுள்ளது. ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரான இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பா.ம.க. மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த எவரும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொறுப்பாளர்கள் மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராக பதிவிட்டால், அத்தகைய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News