ரயில்வே பணி.. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்.!
தெற்கு தொடர்வண்டித்துறையில் முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு தொடர்வண்டித் துறையின் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 12% பணிகள் மட்டுமே கிடைத்துள்ளன. தொடர்வண்டித் துறையில் தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களில் தமிழர்கள் தகுதியிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு தொடர்வண்டித்துறையில் முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணிக்கு தொடர்வண்டித் துறையின் பணியாளர்களிடையே நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 12% பணிகள் மட்டுமே கிடைத்துள்ளன. தொடர்வண்டித் துறையில் தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களில் தமிழர்கள் தகுதியிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மற்றும் ஆந்திரம், கர்நாடகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு தொடர்வண்டித்துறை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டு எல்லையில் பெரும் பகுதி தமிழ்நாட்டில் தான் உள்ளது. தெற்கு தொடர்வண்டித் துறையில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களில் 75% இடங்களை நேரடியாகவும், 25% இடங்களை ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களைக் கொண்டும் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பணியில் உள்ள சி பிரிவு ஊழியர்களுக்கு 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிக்கு போட்டித் தேர்வு, தட்டச்சுக்கான தொழில்நுட்பத் தேர்வு ஆகியவை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 80 பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்த பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 12% இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 88% இடங்களை பிற மாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தெற்கு தொடர்வண்டித்துறையின் செயல்பாட்டு எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கூட, பெரும்பான்மையானவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டுக்கான ரயில்வே பணியிடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுவது இயற்கை நீதிக்கு எதிரானதாகும்.