அ.தி.மு.க.வை உரிமைகோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோருவதற்கு சசிகலாவிற்கு எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

Update: 2021-10-23 13:32 GMT

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோருவதற்கு சசிகலாவிற்கு எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அப்பதவிக்கு சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக தினகரனும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதன் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதனால் அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது அதில், சசிகலாவும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினர். அவர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இது பற்றிய தீர்மானமும் நிறைவேற்றினர். இந்த பொதுக்குழு தீர்மானம் செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இதன் பின்னர் தினகரன் அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதனால் அவர் அந்த வழக்கில் இருந்து விலகுவதாக தினகரன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. சசிகலா மட்டும் இந்த வழக்கை நடத்தி வருகின்றார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவிற்கு எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு வரும் அக்டோபர் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News