சீமான் தந்தை மறைவு: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற கிராமத்தில் இன்று காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தார். செந்தமிழன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் இரஙகல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் தந்தை திரு.செந்தமிழன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரு.செந்தமிழன் அவர்களை இழந்துவாடும் திரு.சீமான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.